தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்’ என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தென்மாவட்டங்களில் பாமகவை அமைப்பு ரீதியாக பலப்படுத்த மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில் விவசாயத்துக்கு ஆதாரமான நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடும் மேலோங்கி வருகிறது. இதனைப் போக்க காவிரி, வைகை, தாமிரவருணி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டி மழைக்காலங்களில் வீணாகச் செல்லும் தண்ணீரை தேக்க வேண்டும்.
தாமிரவருணி ஆற்றில் உள்ள திருவைகுண்டம் அணையை தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கால்வாய்களையும் ஆழப்படுத்த வேண்டும்.
பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. அவற்றைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்க வேண்டும். அதன் உற்பத்தியை முழுமையாக தடுக்க வேண்டும். உடன்குடி அனல்மின் நிலைய பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்’ என்றார் அவர்.