தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவுகள் மற்றும் கர்நாடக மாநிலம் அருகே காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தமிழகம் மற்றும் புதுவையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பெய்தது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் 10 செ.மீ., சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆகிய இடங்களில் 9 செ.மீ., சேலம் மாவட்டம் ஆத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் திருவாண்ணமலை மாவட்டம் ஆரணி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.சென்னை நுங்கம்பாக்கத்தில் 33.6 டிகிரி,வேலூரில் மற்றும் கரூரில் 33.5, சென்னை நுங்கம்பாக்கத்தில் 33.4,கடலூரில் 33.1,திருச்சியில் 32.2 டிகிரி வெயில் பதிவானது. சென்னை நகரை பொருத்தவரை நேற்று மாலை நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது.