20 தமிழர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையை கண்டித்து சென்னை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் சரத்குமார் பேசியதாவது:
சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு காவல்துறையினர் செய்துள்ள அராஜகம் ஜாலியன்வாலாபாக் சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. தமிழர்கள் உள்ளே வந்தால் சுட்டு வீழ்த்துவோம் என்று ஆந்திர வனத்துறை அமைச்சர் கூறுகிறார். இவர்களுக்கும் ராஜபக்சவுக்கும் என்ன வித்தியாசம்? ஆந்திர காவல்துறையின் அராஜகம் தேச ஒற்றுமையை குலைக்கும். இரு மாநிலங்களுக்கு இடையேயுள்ள சுமூகமான உறவு பாதிக்கப்படும்போது மத்திய அரசு தலையிட்டு அதை தடுக்க வேண்டும். ஆனால், பிரதமர் இந்த சம்பவத்துக்கு செவி சாய்க்காமல் கனடா வுக்கு சென்று ஊழல் பற்றி பேசுகிறார் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்துக்கு ஆந்திர அரசு பதிலளிக்க வேண்டும். தமிழர்களை சுட்டு கொல்வோம் என்று கூறிய ஆந்திர அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மகளிர் அணி தலைவர் ஜமீலா மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.