20 சதவீத கூலி உயர்வை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தொடர்வதாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றவட்டார பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்னை தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஆட்சியர், ஒட்டு மொத்தமாக 20 சதவீத கூலி உயர்வு வழங்க கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆட்சியரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், நியாயமான கூலி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.