மோட்டார் வாகன சட்டத்துக்குப் பதிலாக, சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, போக்குவரத்து சங்கங்கள் வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் வாயில் கூட்டங்களை நடத்தவுள்ளன.
போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து மைய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 19-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
புதிய சட்டம் அமலுக்கு வந்தால் போக்குவரத்துக் கழகங்கள் இருக்காது. அனைத்து பெர்மிட்டுகளும் கார்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படும். அரசுப் போக்குவரத்து மட்டுமின்றி, சாலைப் போக்குவரத்தும் கார்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் செல்லும். மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதைக் கைவிடக் கோரி வருகிற 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய மத்திய மற்றும் மாநில தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. முன்னதாக, வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மண்டல தலைமையகங்களில் வாயில் கூட்டம் நடத்தப்படும். தொடர்ந்து, 27-ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறும்.