தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி செல்போன், பணம் கொள்ளை: 4 பேர் கைது

ராயபுரத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி ஓடிய 4 பேரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.

சென்னை ராயபுரம், மேற்கு மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ராயபுரம் கல்லறை சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த 4 பேர், நாகராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.

நாகராஜ் தடுக்க முயன்றபோது மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர்கள் நாகராஜின் தலையில் வெட்டினர். அதன்பின் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்தனர். மேலும் அந்த வழியாக பைக்கில் வந்தவரை மிரட்டி அவரது பைக்கைப் பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பினர். அப்போது அந்த வழியாக வந்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையின்போது அவர் கள் மயிலாப்பூரை சேர்ந்த அரவிந்த் (25), வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த பாலு (25), கங்கா (35), ரமேஷ் (30) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த செல்போன், பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை கைது செய்தனர். படுகாயம் அடைந்த நாகராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE