அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26-ல் தொடக்கம்

தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங் களுக்கான போட்டி தேர்வுக்காக டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தும் இலவச வகுப்பு சென்னையில் ஏப்ரல் 26-ம் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக அம்மையம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மே 23-ம் தேதி போட்டித் தேர்வு நடத்துகிறது.

இதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இலவச வகுப்புகளை வரும் 26-ம் தேதி முதல் சென்னையில் நடத்தவுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்காக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இம்மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 26 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மதுரை, திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 10 மையங்களில் எஸ்ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. தற்போது சென்னையில் தொடங்கப்பட உள்ளது.

சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட உள்ள இந்த பயிற்சி வகுப்புகளில், துறை சார்ந்த நிபுணர்கள், காவல் துறையினர் மற்றும் ஏற்கெனவே தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்று தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வர். தேர்வில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகளையும் வழங்குவர்.

இந்த வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள், 9444982364, 9444641712, 9444214696 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது ‘எண்:6, கச்சாலீஸ்வரர் கோயில் தெரு, பாரிமுனை, சென்னை’ என்ற முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE