எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடப்பு நிதியாண்டில் 3.2 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை மேலாண்மை இயக்குநர் பாஸ்கராச்சார் கூறியுள்ளார்.
காமராஜர் துறைமுகத்தின் தலைமை மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டிலுள்ள 12 பெரும் துறை முகங்களில் காமராஜர் துறை முகம் முதல் கார்ப்பரேட் துறைமுக மாகும். இத்துறைமுகம் தற்போது பல்வகை சரக்குகளை கையா ளும் திறன் கொண்ட 6 முனையங் களைக் கொண்டுள்ளது. கடந்த 2014-15-ம் நிதியாண்டில் காமராஜர் துறைமுகம் 3 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு 10.64 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் இது 2.7 கோடி டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் 3.2 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்துறைமுகம் நிலக்கரியை கையாளுவதில் 8.27 சதவீதம் வளர்ச்சியும், திரவ (எல்.பி.ஜி.) சரக்குகளை கையாளுவதில் 36.63 சதவீதமும், கார் மற்றும் வாகனங்கள் ஏற்றுமதியில் 6.61 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
காமராஜர் துறைமுகம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஒரே சமயத்தில் 5 ஆயிரத்து 797 கார்களை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது. துறைமுக சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அதன் பயனாளிகளிடம் தொடர்பு கொள்ள அண்மையில் வாடிக்கையாளர் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014-15-ம் நிதியாண்டில் காமராஜர் துறைமுகத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.421 கோடியாகும். இது 2013-14-ம் நிதியாண்டில் ரூ.400 கோடியாக இருந்தது. மேலும், துறைமுகத்தின் இயக்க வருமானம் ரூ.563 கோடியை ஈட்டி சாதனை புரிந்துள்ளது.
இவ்வாறு பாஸ்கராச்சார் கூறினார். இச்சந்திப்பின் போது, காமராஜர் துறைமுகத்தின் இயக்குநர் (ஆபரேஷன்) சஞ்ஜய் குமார் உடன் இருந்தார்.