திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள மேலதென்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த 10-ம் தேதி தீமிதி விழா நடைபெற்றது.
திருவிழாவில் பங்கேற்பதற்காக பேரளத்தைச் சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி உமா, குழந்தை கள் கிருஷ்ணன்(8), கீர்த்தனா(4) ஆகியோர் மேலதென்குடி கிராமத்துக்கு வந்தனர். இதேபோல, இஞ்சிக்குடியைச் சேர்ந்த சுரேஷின் தங்கை மேரி, தனது மகன் சாருபாலனுடன்(8) வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை கிருஷ்ணன், கீர்த்தனா, சாருபாலன் ஆகியோர், அங்குள்ள திருமலைராஜன் ஆற்றில், குட்டையாக தண்ணீர் தேங்கியுள்ள பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தைகள் மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த நன்னிலம் போலீஸார், மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.