தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு அரசு விழாவாக, கடந்த 2012-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு விழா 14-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை பல்கலை முதன்மை நிர்வாக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் கவியரங்கமும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை, கட்டுரை போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
கடந்த 2012, 13-ம் ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களுக்கும், பதிப்பகங்களுக்கும் பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் தமிழ்வளர்ச்சித்துறை செயலாளர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.