அரசியல் கட்சி தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர அரசு முடிவு: சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை

மருத்துவ அதிகாரியின் துயர மரணம் குறித்து தவறான தகவல் பரப்பி வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர அரசு முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் காச நோய் திட்டத்தின் மாநில அலுவலராக பணியாற்றிய டாக்டர் ஜெ.அறிவொளியின் துரதிஷ்ட மரணத்தைப் பற்றி சில அரசியல் கட்சி தலைவர்கள் முற்றிலும் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

உணவுக்குழாய் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் அறிவொளி கடந்த 16.2.2015-ல் கடலில் மூழ்கி மரணம் அடைந்தார். மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் மரணத்தை அதுவும் புற்றுநோயால் தீவிர பாதிப்புக்கு உள்ளான மருத்துவரின் துயர மரணத்தை, மருத்துவப் பணியாளர் தேர்வுடன் தொடர்புபடுத்தி அவரதுகுடும்பத்தினரின் உணர்வுகளை மதிக்காமல் சுயவிளம்பரத்துக்காக அறிக்கை வெளியிடுவது, மக்கள் செல்வாக்கு இல்லாத தலைவர்களுக்கு அரசியல் பிழைப்பாக உள்ளது.

உண்மைத்தன்மையை மறைத்து உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE