மூளைச்சாவு: பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் - 4 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

கடலூர் உச்சிமேடு அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கதிரேசன் (42). இவரது மனைவி பரமேஸ்வரி (37). டெய்லராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக பரமேஸ்வரி, கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய மூளையில் பக்கவாதம் ஏற்பட்டிருப்பதும், அதனால் மூளையில் ரத்தக் கசிவு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அன்று இரவே அவர் சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக கணவர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். அதன்படி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதய வால்வு போன்ற உறுப்புகளை எடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு பொருத்தினர். மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானத்தால், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE