ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை சிறையில் உள்ள 54 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
சென்னையில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில், சிறை பிடிக்கப்பட்ட 54 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்றுடன் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்திய-இலங்கை மீனவர் பேச்சுக்கு ஏற்பாடு செய்ததற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, நாளை முதல் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனர்.