புதிய தலைமைச் செயலக கட்டிட வழக்கில் ஸ்டாலினை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், திமுக ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட்டது.
அதன் பின்னர், ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக அரசு இந்த கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது என கூறி, இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியை கொண்டு, ஒரு நபர் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், ஏற்கெனவே கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ரகுபதி கமிஷன் கூறியது. கருணாநிதி இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடுத்து, தனக்கு எதிரான விசாரணைக்கு தடை உத்தரவு பெற்றார்.
இந்நிலையில், ரகுபதி கமிஷன் ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கில் ஆஜராக முடியாது என்று சம்மனை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின், துரைமுருகனை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.