இலங்கையிலிருந்து 54 மீனவர்கள் திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேர் மண்டபம் கடற்படை தளத்துக்கு நேற்று இரவு வந்தடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து அனுராதபுரம் மற்றும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீனவர் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்த 54 மீனவர்களும், மன்னார் மற்றும் ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையிலுள்ள தலைமன்னார் கடற்படை தளத்திலிருந்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்ட 54 தமிழக மீனவர்களையும் சர்வதேச நீர்பரப்பில் இந்திய கடற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் மாலை 6 மணியளவில் ஒப்படைத்தனர். பின்னர் இரவில் மண்டபம் கடற்படை தளத்துக்கு மீனவர்கள் வந்தடைந்தனர்.

தாயகம் திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தங்களின் படகுகளை மீட்டுத் தருமாறு இந்திய கடற்படையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE