மார்ச் 28 முழு அடைப்பு: தமிழக அரசு ஆதரிக்க விவசாய சங்கத் தலைவர் கோரிக்கை

மார்ச் 28-ம் தேதி நடக்கும் முழு கடை அடைப்புக்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

''காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் மார்ச் 28-ம் தேதி முழு கடை அடைப்பு நடைபெறுகிறது.

முழு கடை அடைப்புக்கு திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்கள், லாரி அதிபர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மின்சாரம், மருத்துவம், அவசர ஊர்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் நடக்கும். ஏனைய வாகனங்கள் இயங்கினால் தடுத்து நிறுத்துவோம்.

மார்ச் 28-ம் தேதி நடக்கும் முழு அடைப்புக்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்'' என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE