திருவல்லிக்கேணி கலாச்சார அகாடமி மற்றும் கஸ்தூரி சீனிவாசன் நூலகம் சார்பில் ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2015 - ஒரு முன்அறிவிப்பு’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி மயிலாப்பூரில் உள்ள கோகலே - சாஸ்திரி இன்ஸ்டிடியூட் அரங்கில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் ராமன் பேசும்போது, ‘‘இந்திய கிரிக்கெட் அணி தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் சற்றே கவனம் எடுத்து செயல்படுமானால், இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்.
இந்திய அணியின் கேப்டன் தோனி எந்த நிலையிலும் பதற்றமடையாமல் மிகவும் நிதானமாக அணியை வழி நடத்தி வருகிறார். முதல் 10 ஓவர்களுக்குள் அதிகமான ரன்களை எடுப்பதற்கு இந்திய அணி முயற்சிக்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, மொரீசியஸ் நாடுகளின் முன்னாள் தூதுவர் எம்.கணபதி, முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.ராம் நாராயண், ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த ராம்கி, திருவல்லிக்கேணி கலச்சார அகாடமியின் துணைத் தலைவர் வி.முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.