தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தினர் நடத்திய வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்படவில்லை என்று தமிழக அஞ்சல் துறையின் கண்காணிப்பு பிரிவு உதவி இயக்குநர் எம்.எஸ்.பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சில கோரிக்கைகளை முன் வைத்து தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தினர் கடந்த 26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் அஞ்சல் சேவைகள் ஓரளவுதான் பாதிக்கப்பட்டன. அன்றைய தினம் 73.05 சதவீதம் அஞ்சல் நிலையங்கள் இயங்கின. 69.17 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.
தொழிலாளர் நல ஆணையத்துடனான பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பாக ஏப்ரல் மாதத்தில் துறை ரீதியான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென தமிழக அஞ்சல் துறை தலைவர் அழைப்பு விடுத்தும், தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தினர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.