ரயில்களில் தனியாக பயணம் செய்யும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் கீழ் படுக்கை ஒதுக்கும் வசதி இரண்டில் இருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் ரயில்களில் தனியாக பயணம் செய்தால் கணினி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அவர்களுக்கு தானாகவே கீழ் படுக்கை (லோயர் பெர்த்) ஒதுக்கப்படும் வசதி உள்ளது.
இதன்படி, ஒரு பெட்டிக்கு இரண்டு படுக்கைகள் ஒதுக்கப்பட்டு வந்தன. இனி அந்த எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்படும்.
மேலும், ரயில்களில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்களுக்கு நடு (மிடில்) அல்லது மேல் (அப்பர் பெர்த்) படுக்கை ஒதுக்கப்பட்டால், டிக்கெட் பரிசோதகரே அவர்களுக்கு கீழ் படுக்கையை ஒதுக்கித் தர அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.