காட்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 104 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காட்பாடியை அடுத்த கார்ணாம்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜ்குமார்(23) என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியரின் கார் மோதி பலியானார். இவருடன் சென்ற உதயசூரியன்(27), படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, ஆட்சியருக்கு எதிராக கார்ணாம்பட்டு ரயில்வே மேம்பாலத்திலும் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்திலும் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அந்தக் கட்சியினர், நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் செய்ததாக துரை முருகன், திமுக மாவட்டச் செயலர்கள் ஆர்.காந்தி (கிழக்கு), ஏ.பி. நந்தகுமார் (மத்திய மாவட்டம்) உள்ளிட்ட 104 பேர் மீது திருவலம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.