காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து வரும் 28-ம் தேதி அனைத்து விவசாய சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மார்ச் 23-ம் நாள் மத்திய பா.ஜ.க. அரசு நில கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எழுச்சிமிக்க கண்டன ஆர்ப்பாட்டங்களை விவசாய மக்களின் ஆதரவோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அதேபோல வருகிற மார்ச் 28-ம் நாள் சனிக்கிழமை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவையும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும் கண்டித்து ஒருநாள் முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் பெருமளவில் பங்கேற்று ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.