இளைஞர்கள் சுயதொழில், வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றை பற்றி கூடுதலாக அறிந்து கொள்வதற்காக தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பாக இளைஞர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் பிரிவின் மூலம் உயர்கல்வி, வேலைவாய்ப்பு,சுயதொழில் ஆகியவை குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) ராணி மேரி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் வேலையளிப்பவர்களிடம் தொடர்புகொள்ள முடியும். மேலும் உயர்கல்வி, போட்டி தேர்வுகளை எவ்வாறு அணுகுவது போன்றவற்றை பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.