நீலகிரி மாவட்டத்திலுள்ள பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் புதிய பேருந்துகள் இயக்கப்படுமென, அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் நடராஜன் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் துறை ரீதியான நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம், உதகையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மண்டலப் பொது மேலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.
இதில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியது:
பேருந்துகள் உரிய நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகளில் தற்போது தகுதி சான்று பெற வரும்போது, சரி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
பேருந்துகள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவது, உரிய நேரத்தில் இயக்கப்படாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வழித்தட பெயர்ப்பலகை தெரியும் வகையில் அமைக்கப்படும். கூடுதல் பேருந்துகள் வாங்க கடன் கோரப்பட்டுள்ளது. கடன் தொகை கிடைத்தபின் வாங்கப்படும் 60 புதிய பேருந்துகள், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இயக்கப்படும். பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு செயலாளர் ராஜன் ஆகியோரும் பேசினர்.