திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் நாட்டு வெடி குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அருகேயுள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழி. இங்கு இரு பிரிவினர் இடையே மோதல்போக்கு இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் அண்மையில் கூத்தங்குழியை காலி செய்து இடிந்தகரை சுனாமி காலனியில் குடியேறினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவர்களில் சிலர் சொந்த ஊரான கூத்தங்குழிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வெளியே பயங்கர வெடி சத்தம் கேட்டது. நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஆனால், போலீஸார் இதனை மறுத்துள்ளனர். ‘நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக தகவல் எதுவும் இல்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வாங்கப்பட்ட பட்டாசு வெடித்திருக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்’ என போலீஸார் தெரிவித்தனர்.