பஸ் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் 40 சதவீத பஸ்கள் இயக்கம்- சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு செய்திருந்த ஏற்பாடுகளால் 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் 1.43 லட்சம் தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற் சங்கங்கள் கடந்த 2 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாலையிலேயே பணிமனைகளுக்கு வந்து, தொழிலாளர்களை சமரசம் செய்து பஸ்களை எடுக்க வைத்தனர். பணிமனைகளில் நடந்த நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

சென்னையில் பல்லவன் இல்லம் மத்திய பணிமனை, எம்.கே.பி.நகர், தி.நகர், வடபழனி, திருவொற்றியூர், திருவான்மியூர், தாம்பரம், வியாசர்பாடி, அடையார், மந்தைவெளி, ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 27 பணிமனைகளில் இருந்து 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரம், பூந்தமல்லி, பெரும்புதூருக்கு செல்லும் மாநகர பஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று காலை 6.50 மணிக்கு மத்திய பணிமனைக்கு வந்தார். அங்கிருந்து புறப்படும் பஸ்கள் மற்றும் வேலைக்கு வந்திருக்கும் தொழிலாளர் எண்ணிக்கை குறித்து ஆய்வுசெய்தார்.

இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிமுக தொழிற்சங்க உறுப்பி னர்கள், தற்காலிக உறுப்பினர் களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 2 ஆயிரம் பஸ்கள் (மொத்தம் 3,565 பஸ்கள்) இயக்கப் பட்டன. மொத்தமுள்ள 23 ஆயிரம் பஸ்களில் சுமார் 16 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டன. பிரச்சினைக் குரிய இடங்களில் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. இன்றும் அரசு பஸ்களை பெருமளவு இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போக்குவரத்துத் துறை நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் முத்தரப்பு பேச்சு வார்த்தை, சென்னை தேனாம் பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடக்கிறது. இதில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பேசப்படும் என தெரிகிறது. ஏற்கெனவே 2 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE