பேருந்துகள் ஓடாததால் வசூல் வேட்டையில் இறங்கினர் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள்

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பன் மடங்கு கட்டணங்களை உயர்த்தினர். இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோக்களில் சாதாரண கட்டணம் ரூ. 50 ஆகவும், ஷேர் ஆட்டோக்களில் ரூ. 20 ஆகவும் உயர்த்தப்பட்டு இருந்தது.

ரயில் மற்றும் பஸ் நிலையங்களின் வாசல்களில் ஆட்டோக்கள் பயணிகளுக்காக பேரணி போல் அணிவகுத்து காத்துக்கொண்டு இருந்தன. ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்ட இடத்துக்கு செல்வதற்கு கூட ஆட்டோ ஓட்டுநர்கள் ரூ.50 கட்டணமாக வசூலித்தனர். ஷேர் ஆட்டோக்களில் சாதாரண நாட்களில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல ரூ. 7 ஆக இருந்த கட்டணம் நேற்று ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டது.

இது குறித்து ஷேர் ஆட்டோ பயணி முத்துப்பாண்டி கூறும்போது,’’ சென்னை அசோக் பில்லரில் இருந்து கிண்டி வர ஒரு நபருக்கு ரூ. 40 கட்டணம் வசூலிக்கிறார்கள். பேருந்து ஓடாத காரணத்தால் காசு இருந்தால்தான் வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம்’’ என்றார்.

பயணிகளில் உரிய இடத் துக்கு சென்றால் போதும் என்ற எண்ணத்தில் ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்களில் நெரிசலையும் பொறுத்துக் கொண்டு சென்றார்கள்.

கிண்டி ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறும்போது,’’ பொதுவான நாட்களில் கிண்டியில் இருந்து விமான நிலையம் செல்ல ரூ.150 கேட்போம். ஆனால் நேற்று பஸ்கள் ஓடாத காரணத்தால் விமான நிலையம் செல்லும் பயணிகளிடம் ரூ.400 வசூலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

வேளச்சேரி - தி.நகர் ரூ.250

“வேளச்சேரியில் இருந்து தி. நகர் செல்ல பொதுவாக ரூ. 150 ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்பார்கள். ஆனால் பஸ் ஸ்டிரைக் என்பதால் நேற்று அதிரடியாக ரூ.250 கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் வசூலித்தார்கள்’’ என சீதாலட்சுமி என்பவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE