தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை தேவை: பிரதமருக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்



தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.

இந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகவும் பாராட்டுக்குரியது.

ஐந்து மீனவர்களின் விடுதலையால் ஐந்து குடும்பங்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.

தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள், மேலும் அச்சுறுத்தலையும் தரும்.

இந்த சமூக மக்கள் இனி வரும் காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தர பிரதமர் மோடி முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்" என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE