முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசு அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அந்த அளவு அணையில் நீர் தேக்கி வைக்க, கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசையும் கேரள அரசு அணுகியது. அதே நேரத்தில் முல்லை பெரியாறு அணையில் கேரள எம்எல்ஏ அத்துமீறி நுழைந்தது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு, அணைக்கு மத்திய பாதுகாப்பு கோரி மத்திய நீர்வள ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, இரு மாநிலப் பிரதிநிதிகளுடன் கடந்த சனிக்கிழமை மத்திய நீர்வளத்துறை பேச்சு நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 26-ம் தேதி கூட்டப் போவதாக மத்திய அரசுக்கு கேரளம் கடிதம் எழுதியது. அதேபோல தமிழக அரசும் உயர்நிலைக் குழுவைக் கூட்ட உள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து, மத்திய அரசின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், முல்லை பெரியாறு அணை பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், பொதுப் பணித்துறை செயலர் சாய்ராம் உள்ளிட்ட அதிகாரிகளின் குழு கூடி முக்கிய முடிவெடுக்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE