ஆணவப் படுகொலை; காதலர் இறந்த நிலையில், இளம் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By டி.ஜி.ரகுபதி

காதல் விவகாரத்தால் சொந்தத் தம்பியையே அண்ணன் படுகொலை செய்த நிலையில், அரிவாளால் வெட்டப்பட்ட இளம் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளிப்பாளையம் சாலை ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன்கள் வினோத்குமார் (24), கனகராஜ் (22). இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள். கனகராஜும், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளிப்பாளையம் சாலையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு, கனகராஜின் அண்ணன் வினோத்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

வினோத்குமாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கனகராஜ் கடந்த சில நாட்களாக அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அந்த இளம்பெண் அடிக்கடி வந்து கனகராஜுடன்பேசிச் சென்றுள்ளார். இதைக் கேள்விப்பட்டு மேலும் ஆத்திரமடைந்த வினோத்குமார், கடந்த ஜூன் 25-ம் தேதி அங்கு சென்று கனகராஜ் மற்றும் அந்த இளம்பெண்ணை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதைத் தொடர்ந்து வினோத்குமார் கைது செய்யப்பட்டார்.

படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE