மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலை கண்காணிக்க இந்திய மருத்துவ சங்கத்தின் உதவியை மாநகராட்சி சுகாதாரத்துறை நாடியுள்ளது.
கொசுக்கள் உற்பத்தியாகும் மூலங்களை சுகாதார அலுவலர்களைக் கொண்டு அகற்றி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் கடந்த 3 வாரங்களில் 317 மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்தி 31,062 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாவோர் யாரேனும் சிகிச்சை பெற்று வருகிறார்களா என தெரிந்துகொள்ளும் விதமாக, மாநகராட்சி சுகாதாரத்துறை இந்திய மருத்துவ சங்கத்தின் உதவியை நாடியுள்ளது.
அதில் உறுப்பினர்களாக இருக்கும் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களை நடத்தி வரும் மருத்துவர்களை அணுகி, வாரந்தோறும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர், அவர்களின் நோய் விவரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கோரியுள்ளது.
சுமார் 650 மருத்துவர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.