சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த பொறியியல் கல்லூரி மாணவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தரும அடி கொடுத்தனர்.
சென்னை சேலையூர் நியூ காலனி 2-வது தெருவில் வசிப்பவர் கமலாபாய்(38). இவர் வீட்டருகே உள்ள தனது அண்ணனின் வீட்டுக்கு நடந்து சென்றார். பலவேசம்மன் கோயில் அருகே சென்றபோது நடந்துவந்த ஒருவன் கமலாபாய் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடினான். கமலாபாய் அபயக்குரல் எழுப்ப, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் செயின் பறித்துச் சென்றவனை விரட்டிச் சென்று பிடித்து தரும அடி கொடுத்து, சேலையூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த அனந்தபத்மநாபன்(20) என்பதும், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பிரபல கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படிப்பதும் தெரிந்தது.
சென்னையில் அக்காவின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு செல்லும் அனந்தபத்மநாபன், நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பர செலவு செய்வதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவர் வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறாரா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.