தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய ராஜபக்ச சம்மதம்: இலங்கை அமைச்சர் தகவல்

By கே.கே.மகேஷ்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

இதனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ஊவா மாகாண உள்கட்டமைப்புத் துறை அமைச்சருமான செந்தில் தொண்டமான் 'தி இந்து'விடம் உறுதி செய்தார்.

ராமேசுவரம் மீனவர்களான வில்சன், செல்வன் லாங்கெட், அகஸ்டன், லோயலோ, எமர்சன், பிரசாத் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவில் இருந்து ஹெராயின் கடத்தி வந்ததாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் அவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தத் தீர்ப்பை ரத்து செய்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், மீனவர் சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதேபோன்ற முயற்சிகள் இலங்கையில் உள்ள இந்திய தமிழர்களாலும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ஊவா மாகாண உள்கட்டமைப்புத் துறை அமைச்சருமான செந்தில் தொண்டமானை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியது:

"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு மத்திய கால்நடை அபிவிருத்தித் துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமானும், நானும் அதிபர் ராஜபக்சவை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினோம். தண்டனை பெற்ற மீனவர்கள் ஏற்கெனவே 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டனர். எனவே, அவர்களது தண்டனையை குறைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஏற்கெனவே இந்திய பிரதமர் மோடியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில், மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான ஆணையை அரசு அதிகாரிகளுக்கு அதிபர் வழங்கியுள்ளார்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அதிபர் தலையிட முடியாது. தற்போது மீனவர்கள் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதிபர் அதில் தலையிடுவதில் சிக்கல் உள்ளது.

எனவே, அந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுமாறு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய தூதரக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றவுடன், 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். அதிகபட்சமாக திங்கள்கிழமைக்குள் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு உள்ளது" என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE