கல்லூரி மாணவர் சாவில் நீடிக்கும் மர்மம்: கொலை வழக்காக பதிவு செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

பழநி ராஜாஜி சாலையைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் முத்துக்குமார் (25). கல்லூரி மாணவர். இவர், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியைச் சேர்ந்த புவனேஸ்வரியை காதலித்து வந்தார்.

வெவ்வெறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நான்கு நாள்களுக்கு முன், புவனேஸ்வரியை பார்க்க விருப்பாச்சி சென்ற முத்துக்குமார், கிணற்றில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சத்திரப்பட்டி போலீஸார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே புவனேஸ்வரியின் உறவினர்கள் முத்துக்குமாரை அடித்து கொன்று வீசி விட்டதாகக் கூறி, நேற்று 4-வது நாளாக சடலத்தை வாங்க மறுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நேற்று மாலை முத்துக்குமாரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து முத்துக்குமாரின் சடலத்தை பெற்றுச் சென்றனர்.

திருமாவளவன் கூறும்போது, மாணவர் இறந்ததை கொலை வழக்காக பதிவு செய்யாவிட்டால் அனைத்து தலித்துகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை திரட்டி போராட்டம் நடத்தப்படும். நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்படும். போராட்டம் நடந்த இடத்துக்கு எஸ்.பி, ஆட்சியர் வந்து விசாரிக்காதது வருந்தத்தக்கது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE