மேகாலயா போராளிக் குழுவினர் திருப்பூரில் கைது

திருப்பூர் அருகே பதுங்கியிருந்த மேகாலயா மாநிலப் போராளிக் குழுத் தலைவர் உள்பட 2 பேரை, மேகாலயா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் திருப்பூரில் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில், மேகாலயா தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சாக்கோ தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த, அசாம் மாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அசாம் மாநிலம், மெண்டித்தஷ் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய போராளிக் குழுத் தலைவர் வில்லியம் ஏ.சங்மா(27) அங்கு பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது. இவர் அசாம் மாநிலம், கோல்பரா மாவட்டம், பக்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அதேபோன்று மேகாலயா மாநிலம், தெற்கு கரோஹில்ஸ் சோக்பாட் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள டாகல்கர் கிராமத்தைச் சேர்ந்த அலாஸ் ஆர்.சங்மா(32) என்கிற மற்றொரு போராளிக் குழுவைச் சேர்ந்தவரும் இங்கு பணிபுரிவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1-ல் ஆஜர்படுத்தி மேகலாயா அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட அலாஸ் ஆர்.சங்மா, வில்லியம் ஏ.சங்மா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE