தனது ஆட்டோவில் தவறவிடப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை டிரைவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அது குழந்தையின் சிகிச்சைக்கான பணம் என தெரியவந்துள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த ஜோஸ்(37) என்பவர் தனது குழந்தையை இதய சிகிச்சைக்காக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருந்தார். குழந்தையின் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சைதாப்பேட்டையில் இருந்து மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் வந்தார். கீழே இறங்கி சிறிது தூரம் சென்ற நிலையில் பணம் வைத்திருந்த பையை ஆட்டோவிலேயே தவறவிட்டது தெரிந்தது.
உடனே ஆயிரம்விளக்கு காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் சென்றார். போலீஸாரிடம் அவர் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பணப்பையுடன் காவல் நிலையத்துக்கு வந்தார். போலீஸார் விசாரணை நடத்தி ரூ.3 லட்சம் பணத்தை ஜோஸிடம் ஒப்படைத்தனர்.
பணத்தை ஒப்படைத்த சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தை போலீஸார் வெகுவாக பாராட்டினர்.