அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டரை மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சரியாக சிகிச்சை அளிக்கப்படாததால் குழந்தை இறந்ததாக கூறி அதன் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெற்குன்றம் பெரியார் நகர் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (29). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமரஜோதி (27). இவர்களுக்கு லத்தியா (3) என்ற பெண் குழந்தையும், இரண்டரை மாத ஆண் குழந்தையும் உள்ளது. இதில் ஆண்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று காலை சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால்தான் குழந்தை இறந்துவிட்டது என்று கூறி குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE