காவலர்களின் மெத்தனப் போக் கால், துறைமுகத்துக்கு சரக்கு களை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகளால் வடசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்துக்கு கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்குகள், அங் கிருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள், சரக்கு முனையத்தில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இரண்டு பன்னாட்டு நிறுவனங் கள் மூலம், இந்த சரக்குகள் கையாளும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்குள் செல்கின்றன. அதேபோல், அங்கிருந்தும் லாரிகள் வெளியே வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் சரியாக பணியில் ஈடுபடாததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராயபுரம் டிரெய்லர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ரவி கூறுகையில், “துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் செல்வதற்காக துறைமுக சாலையில் இரண்டு வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த லாரிகளை அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் துறைமுகத்துக்குள் அனுப்பி வைப்பர். இதற்கு சில காவலர்கள் லாரி ஓட்டுநர்களிடம் பணம் வசூலிப்பது உண்டு. இதனால், சில லாரி டிரைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல், மற்ற வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில் செல்வதுண்டு. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்நிலையில், லாரி உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கின்றனர். இதனால், கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டத்துக்கு லாரிகளை கண்ட இடத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், கடந்த மூன்று நாட்களாக வடசென்னை பகுதியில் நீண்ட தூரத்துக்கு நிற்கும் கன்டெய்னர் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.