திருநின்றவூரில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் வசூலில் ஈடுபட்ட போலி போலீஸார் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருநின்றவூர் வினோபா நகர் பெரியபாளையம் சாலையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆணையும், பெண்ணையும் 2 பேர் வழிமறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
அவர்களை ரோந்து போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில், போலிவாக்கத்தை சேர்ந்த சந்திரமோகன், ஆவடியை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், போலீஸ் என்று கூறி பலரிடம் வசூலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
திருநின்றவூர் சுற்றுப் பகுதிகளில் இருவரும் சேர்ந்து இரவு நேரங்களில் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வரும் காதல் ஜோடிகளை பிடித்து போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதேபோல சில நடைபாதை வியாபாரிகளிடமும் இவர்கள் வசூல் செய்துள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.