ரயில் நிலைய சுற்றுச்சுவர் இடிந்ததால் நடைபாதை இன்றி பாதசாரிகள் அவதி

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பெரம்பூர் நெடுஞ்சாலையில் சுற்றுச்சுவர் இடிந்து பல ஆண்டுகளாக சீர்படுத்தப்படாமல் இருப்பதால், அந்த வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின் றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு பெய்த கன மழையால், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள 4 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவரில் 20 மீட்டர் வரை இடிந்து விழுந்தது. இதனால் பெரம்பூர் நெடுஞ்சாலையில் மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் இறங்கி நடக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ரயில்வே துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இடிபாடுகளை அகற்றவும், அப்பகுதியில் புதிதாக சுற்றுச்சுவர் கட்டவும் ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இடிந்து விழுந்த பெரம்பூர் ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் அகற்றப்படாமல் நடைபாதையிலேயே கிடக்கிறது. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE