கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க 'ஸ்டூடன்ஸ் விங்' என்ற தனி போலீஸ் படையை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உருவாக்கியுள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. வெட்டு, குத்து என்ற அளவுக்கு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாநிலக் கல்லூரி வளாகத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் இரு கல்லூரி மாணவர்க ளுக்கும் தங்கசாலை பஸ் நிலையம் அருகே தகராறு ஏற்பட்டது. இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மாநிலக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பழிக்குப் பழியாக கடந்த 12-ம் தேதி வண்ணாரப்பேட்டையில் பஸ்ஸில் வந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் 3 பேரை ஒரு கும்பல் வெட்டியது. அப்போது பஸ்ஸில் வந்த ஒரு பெண்ணுக்கும் வெட்டு விழுந்தது. கல்லூரி மாணவர்களிடையே தொடர்ச்சி யாக நடந்து வரும் மோதல்கள், போலீ ஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளன.
இதையடுத்து, கல்லூரி மாணவர்க ளின் மோதலைத் தடுக்க மாநகர போலீஸில் ‘ஸ்டூடன்ஸ் விங்’ என்ற தனிப்படையை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உருவாக்கி உள்ளார். உதவி ஆணையர் ராஜேந்திரன், ஆய்வாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் இந்த தனிப்படை செயல்படும். மேலும், கல்லூரி மாணவர்களின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க, ஒவ்வொரு கல்லூரிக் கும் ஒரு நுண்ணறிவுப் பிரிவு காவலர் நியமிக்கப் பட்டுள்ளார். பிரச்சினையை உருவாக் கும் மாணவர்களின் விவரங்களை இவர்கள் சேகரித்துக் கொடுப்பார்கள். அதை வைத்து உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் மாநகர காவல் ஆணையர் ஒரு கடிதம் அனுப்பி யுள்ளார். அதில், மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.