காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சி இயக்குநர் அலுவலகம் சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு சார்பு அலுவலர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு 2 நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில், ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தப் பயிலரங்கில் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலிருந்தும் ஒரு அலுவலர் மற்றும் அலுவலர் தொகுதி பொறுப்பு வகிக்கும் கண்காணிப்பாளர் நிலையில் ஒருவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
இப்பயிலரங்கில் ஆட்சி மொழித் திட்டத்தின் இன்றி யமையா திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர் அனைவரும் தமிழில் மட்டுமே சுருக்கொப்பம், கையொப்பம் இட வேண்டும், அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழி திட்ட செயலாக்க அரசாணைகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.