ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பதன்கோட் என்ற இடத்தில் 28-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 111-வது ராக்கெட் படைப் பிரிவின் பீரங்கிகள் படையில் பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் முகையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி நிர்மல் விஜி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அந்தோணி நிர்மல் விஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்தச் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.