ஓபிஎஸ் அணியால் மட்டுமே நல்லாட்சியைத் தர முடியும்: முன்னாள் டிஜிபி திலகவதி உறுதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் டிஜிபி ஜி.திலகவதி ஆதரவு தெரிவித்திருந்தார். நேற்று ஓபிஎஸ் இல்லத்துக்கு அவர் வந்திருந்தார். அப்போது தாம் ஏன் ஓ.பன்னீர்செல்வம் அணியை ஆதரிக்கிறேன் என்பது குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:

நான் காவல்துறையில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றி நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றுள்ளேன். மக்கள் துயரங்களைப் போக்கியிருக்கிறேன். ஓய்வுபெற்ற பிறகு சமூக சேவையில் ஈடுபட ஆர்வமாக இருந்தேன். ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துதான் சேவையில் ஈடுபட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். அதனால் எந்த கட்சியில் சேரலாம் என்ற குழப்பத்தில் இருந்தேன்.

இந்த நிலையில் ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்ததும் அதன்பின்னர் அவர் எடுத்த துணிச்சலான முடிவும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக சிறப்பாக அவர் பணியாற்றினார். அப்போதே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அபிமானமும் ஏற்பட்டது. எனவே, அவரது தலைமையை ஏற்று வந்துள்ளேன். அவர் நிச்சயம் நாட்டை ஆள்வார். மக்களுக்கு நல்லது நடக்கும். ஓ.பன்னீர்செல்வம் அணியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியைத் தர முடியும் என்றார் திலகவதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE