38 ஆண்டுகளில் முதல் முறையாக முல்லை பெரியாறில் 140 அடி நிரம்பியது

வட கிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகத்தின் முக்கிய அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது.

தேனி மாவட்டத்திலுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த 38 ஆண்டுகளில் முதல் முறையாக 140 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் டெல்டா மாவட்ட விவசாயத்துக்கு நீர் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 101.80 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணையில் கடந்த ஆண்டு 79.16 அடி நீர் மட்டம்தான் இருந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையான பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 85.78 அடியாக உயர்ந்துள்ளது.

வைகை அணையில் 50.23 அடியாகவும், பாபநாசத்தில் 112.60 அடியாகவும், மணிமுத்தாறில் 80.40 அடியாகவும், பரம்பிக்குளம் அணையில் 70.01 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதார ஏரிகளான பூண்டியில் 20.21 அடியாகவும், செங்குன்றத்தில் 9.41 அடியாகவும், செம்பரம்பாக்கத்தில் 13.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத் திலுள்ள வீராணம் ஏரியில் 12.60 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE