சென்னை அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் காந்தி தெரு உள்ளது. இந்த தெருவில் வசிப்பவர்களில் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை வீட்டுக்கு வெளியே நிறுத்துவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை இரவில் இப்படி நிறுத்தப்பட்டிருந்ததில் 5 மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் மயிலாப்பூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற மோட்டார் சைக்கிள்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. காந்தி தெருவில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சாலையில் செல்லும் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. அவ்வப்போது சண்டைகளும் நடந்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட யாராவது மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்று அபிராமபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர்.