இவை scale model எனப்படும் அளவை மாதிரிகள். அதாவது நிஜ ரயிலின் அளவில் 87-ல் ஒரு பங்கு அளவீடுகளைக் கொண்டது. தண்டவாளம், சிக்னல், ரயிலின் ஜன்னல்கள் கூட அதே அளவில் வடிவமைக்கப்பட்டவை.
சிக்னல் விழுந்ததும் ரயில் கிளம்புகிறது. தண்டவாளத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இரண்டு, மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் செல்கின்றன. அடுத்த ரயில் நிலையத்தில் சரியாக நிற்கின்றன. இவையெல்லாம் நாம் சாதாரணமாக பார்க்கும் காட்சிகள்தான். ஆனால் இவை வீட்டின் வரவேற்பறையில் நடந்தால்? ஆச்சரியமாக உள்ளது அல்லவா? சென்னை முகலிவாக்கத்தில் வசிக்கும் பொறியாளர் கே.ஆர்.எஸ்.கணேசன் தனது வீட்டில் இவ்வாறு ரயில் மாதிரிகளை செய்வதை பொழுது போக்காக வைத்திருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒரு ரயில் மாதிரியை செய்துவைத்து தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆர்வமுள்ள பொறியியல் மாணவர்களுக்கும் காட்சி விருந்தளிக்கிறார்.
இவை வெறும் பொம்மைகள் அல்ல என்று விவரிக்கும் கணேசன், “இவை scale model எனப்படும் அளவை மாதிரிகள். அதாவது நிஜ ரயிலின் அளவில் 87-ல் ஒரு பங்கு அளவீடுகளைக் கொண்டது. தண்டவாளம்,
சிக்னல், ரயிலின் ஜன்னல்கள் கூட அதே அளவில் வடிவமைக்கப்பட்டவை. வீட்டின் “ஒரு முழு அறையையும் வரவேற்பறையில் 200 அடி இடத்தையும் இந்த மாதிரி எடுத்து கொண்டது. இது போன்ற அளவை மாதிரிகள் இந்தியாவில் மிகக் குறைவு” என்கிறார்.
ஆறு லட்சம் வரை மொத்த மதிப்பு கொண்ட இந்த மாதிரியில் இரண்டு ரயில் யார்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான ரயில்கள் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்வது போல் இவை இயங்குவது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ள வடிவத்தில் ரயில்கள் சிமெண்ட் தொழிற்சாலை யினூடாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணேசன் தனியார் நிறுவனத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஆலோசகராகவும் இந்திய சாலைகள் காங்கிரஸில் உறுப்பினராகவும் உள்ளார்.சங்கீதத்திலும் மிகுந்த ஆர்வமுடையவர். அவருக்கு இந்த வித்தியாசமான பொழுது போக்கின் தூண்டுதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “1960களில் எனது பள்ளி நண்பர் வீட்டில் பொம்மை ரயிலை முதன் முதலில் பார்த்தேன். அதன் பின் பள்ளியிலிருந்து ரயில்வே கண்காட்சிக்காக அழைத்து சென்றார்கள். அப்போதுதான் அளவை மாதிரியை பார்த்தேன். அதிலிருந்து எனக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு மாதிரியை செய்து முடிக்க ஆறு மாதம் ஆகும். முதன் முதலில் 120 அடி நீள தண்டவாளத்துடன் இரண்டு டீசல், ஒரு புகைவண்டி மாதிரியை செய்தேன். இதற்கான உபகரணங்களில் சிலவற்றை வெளிநாட்டிலிருந்து எனது நண்பர்கள் பரிசாக அளித்தனர். தற்போது 250 அடி நீளமுள்ள தண்டவாளமும் 8 ரயில்களும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த ஆண்டு 20 ரயில்கள் கொண்ட மாதிரியை உருவாக்க உள்ளேன். ஆர்வமுள்ள மாணவர்களும் இதனை கற்றுக் கொள்ளலாம்” என்கிறார்.