அவசரச் சட்டம் விவகாரத்தின் மக்களின் கருத்தையே ராகுல் தனது நிலைப்பாடாகக் கொண்டிருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள், சத்திய மூர்த்திபவனில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசனை சனிக்கிழமை சந்தித்து பேசினர்.
அப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். படகுகளையும் மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு, வரும் 7-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான குர்ஷித் இலங்கை செல்கிறார். அவரிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுகிறேன். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று வாசன் கூறினார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வாசன் , தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி பற்றிய அவசர திருத்தச் சட்டத்தை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்துள்ளார். ராகுலின் கருத்து, நாட்டு மக்களின் கருத்து என்றார் தற்போது காங்கிரஸ் மேலிடம் 5 மாநில தேர்தலில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.