பேருந்தை ஓட்டிக் கொண்டு வரும்போதே நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி மாரடைப்பில் இறந்தார் டிரைவர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சம்பத்குமார். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார். புதன்கிழமை காலை எழும்பூரில் ஒரு ஓட்டலில் இருந்து விமானப் பணிப்பெண்களை ஏற்றிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறக்கி விட்டார். பின்னர் அங்கிருந்து 13 விமானப் பணிப்பெண்களை ஏற்றிக் கொண்டு அதே ஓட்டலுக்கு வந்து கொண்டிருந்தார்.
கத்திப்பாரா பாலம் அருகே வந்தபோது சம்பத்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி சீட்டிலேயே மரணம் அடைந்து விட்டார். பேருந்தை ஓரமாக நிறுத்தியதால் 13 பெண்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பரங்கிமலை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சம்பத்குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.