டி.எஸ்.பி.க்கள் பதவி உயர்வுக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

டி.எஸ்.பி.க்கள் 14 பேர் கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக வழக்கறிஞர் பி.புகழேந்தி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 டி.எஸ்.பி.க்களின் பணி நியமனம் செல்லாது என்று 4.3.2011 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்தத் தீர்ப்பு வெளியாகி 30 மாதங்களுக்கு மேலாகியும், 14 பேரும் இன்னும் காவல் துறையில் பணியில் நீடிக்கின்றனர். இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 14 டி.எஸ்.பி.க்களையும் பணியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக கடந்த 29.9.2013-ம் தேதி வெளியான அரசாணைப்படி தமிழக அரசு அவர்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்துள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், கடந்த 4.3.2011-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்துமாறு மாநில உள்துறை முதன்மைச் செயலாளர், காவல் துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் புகழேந்தி கூறியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் பொது நல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனினும், உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலும் கூட அந்த டி.எஸ்.பி.க்கள் எந்தத் தகுதியின் கீழ் இன்னும் பணியில் தொடர்கிறார்கள் என விளக்கம் கோரும் மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இதனையடுத்து வழக்கறிஞர் புகழேந்தி புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE