மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கருணாநிதியை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்களை அதிமுகவினர் தாக்கினர்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மா னத்தை மேயர் சைதை துரைசாமி படித்தார்.
‘ஜெயலலிதா குற்றமற்றவர். அவர் மேல் நீதிமன்றம் சென்று குற்றமற்றவர் என்று நிரூபிப்பார். ஜெயலலிதா மீதான வழக்கு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது பொய்யாக சூழ்ச்சி செய்து போடப்பட்ட வழக்கு’ என துரைசாமி கூறினார்.
அப்போது சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அதிமுக உறுப்பினர்கள் பலர், திமுக உறுப்பினர்களை சூழ்ந்துகொண்டு சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதனால், மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளி யேறினர். இதுகுறித்து சுபாஷ் சந்திர போஸ் கூறும்போது, ‘‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதி என்று மன்றத்தில் மேயர் பதிவு செய்தார். தவறான தகவலை மன்றத்தில் பதிவு செய்யக் கூடாது. அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவிக்கவே எழுந்தேன். அதற்குள் அதிமுக உறுப்பினர்கள் என்னையும் மற்ற திமுக உறுப்பினர்களையும் தாக்கினர்’’ என்றார்.